பாவங்களில் பெரிய பாவம் துரோகம் செய்வதுதான்

பொய், புளுகு, பித்தலாட்டம், புறம் பேசுவது, ஏமாற்றுவது போன்றவை எல்லாம் பாவங்கள் என்று நமது பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.. பாவங்களில் பெரிய பாவம் துரோகம் செய்வதுதான். நம்பிக்கை துரோகம் செய்தவர்க்கு செய்யும்பொழுது குரூர திருப்தியை தரலாம் என்றாலும் அதன் விளைவுகள் பிறகு விபரீதமாக இருக்கும். நமக்கு உண்டாகும் நன்மை தீமைகளுக்கு நாம்தான் பொறுப்பு. சில வேளைகளில் பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்கள் நம்மை தொடர்வதாகக்கூட தோன்றும். ஆனாலும், இந்த ஜென்மத்தில் நாம் குறைந்த பட்சம் ஒரு மனித மனத்துடன் நடந்து கொண்டாலே போதும். நமது பாவக்கணக்கு சேராமல் பார்த்துக்கொள்ளலாம். ஒரு பாவத்திற்கு பரிகாரம் என்பது நமது மனச்சாந்திக்காக வேண்டி இருக்கலாமே தவிர அதுவே மாற்றாகமுடியாது. எல்லா தர்மவழிகாட்டிகளும் பாவத்தின் சம்பளமாக மரணத்தை காட்டுகின்றன. அந்த மரணம் சிலருக்கு சுலபமாகவும், சிலருக்கு மிகுந்த சிரமத்துடனும் மேலும் சிலருக்கு எப்போது வாய்க்கும் வந்தால் நல்லது என்று ஏங்க வைக்கும். பாவத்திற்கு செய்யப்படும் பரிகாரம் நமது பாவத்தின் தீவிரத்தை 10-20% மட்டுமே குறைக்கக் கூடும். மீதி 80% பாவம் நம் கணக்கில் வரவில்தான் இருக்கும். நாம் செய்யும் நல்ல காரியங்கள் நமக்கு பயன் தருவதை விட நம் சந்ததியருக்கு தான் அதிக பயன் தரும். ஆனால் நாம் செய்யும் பாவத்திற்கு நாமே பொறுப்பு.  என்னடா இவன் பெரிய பெரிய வார்த்தைகளை சொல்கிறானே என நினைக்க  வேண்டாம். இங்கு நான் சொல்வது எல்லாமே என்னுடைய கருத்துக்கள் தான்.   வாசிப்பவருக்கு இதில் மாற்றுக் கருத்து இருக்கலாம், இருக்கும் என்பதை நான் அறிவேன். துரோகம் என்பது நாம் பிறருக்கு இழைக்கும் பொழுது நமக்கு அது சரியென்று தோன்றும். மூன்றாவது மனிதர் மற்றொரு மனிதருக்கு செய்யும் பொழுது நமக்கு அது சில சமயம் தவறுபோலவும் சில சமயம் சரி என்றும் தோன்றும். நாம் பாதிக்கப் படும் பொழுது அல்லது அந்த காட்சியில் நாமும் ஒரு பாத்திரமாக இருக்கும் பொழுது அது மாபெரும் தவறாக தோன்றும். பிறரை நாம் நிந்திக்கும் அல்லது குற்றம் சொல்லும் பொழுது சம்பந்தப் பட்டவரின் நிலையில் நம்மை இருத்தி நமது திருவாயை திறக்கும் முன் ஒன்றுக்கு பலமுறை யோசித்தல் நலம். சமூகத்தில் பெரிய ரௌடி, தாதாவாக இருப்பவர் பிறரை பயமுறுத்தி அடக்க நினைப்பார். பெரிய குடும்பங்களில் வாரிசுகளில் சிலர் பண பலம் மிக்கவராக இருக்கும் பட்சத்தில் அவரது சொல், ஆதிக்கம் மேலோங்கி நிற்கும். அவரது பேச்சுக்கு யாரும் எதிர் பேச்சு பேச மாட்டார்கள். இதுவே அவர்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு தனக்கு அந்த குடும்பத்தில் பெரிய செல்வாக்கு இருப்பதாக இறுமாப்பு கொள்வார்கள். பிறர் அமைதி காப்பதற்கு காரணம் பல இருக்கலாம் - நாயை அடிப்பானேன் என்று ஒதுங்கி இருக்கலாம். அல்லது விநாசகாலே விபரீத புத்தி - அவரர் செய்யும் பாவம் அவர்கள் அனுபவிப்பார்கள் என்று எண்ணி அமைதியாக இருக்கலாம். ஆனாலும்  தவறு செய்பவர்களுக்கு இருக்கும் இறுமாப்பும், அகந்தையும், ஆணவமும் அவர்கள் புத்தியை மறைத்து விடும். பிறர் தன்னிடம் பயப்படுவது போல் தோன்றுவது அல்லது தான் எது சொன்னாலும் அங்கு மறுபேச்சு இருப்பதில்லை என்ற எண்ணம் இவர்களை மேலும் மேலும் இதுபோன்ற துஷ்ட செயல்களை செய்யத் தூண்டும்.
பணக்காரன் செய்யும் துரோகம் சமூகத்தை ஏமாற்றி பணம் சேர்ப்பது. அவ்வாறு சேர்த்த பணத்தை கொண்டு பிறகு சமூக சேவைகள் செய்தால் தான் செய்த பாவங்கள் சரி செய்யப்படும் என்று தனக்கு தானே சப்பைக்  கட்டு கட்டிக் கொள்வது. அரசியல் வாதிகள் செய்யும் துரோகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அவரை முள் படுக்கையில் கிடத்தும். மேலும் சிலர் மனசாட்சிக்கு துரோகம் செய்வர். அவர் மனம் தான் செய்வது தவறு என்பதை சுட்டிக் காட்டும் ஆனாலும் அவரது அகம்பாவம் அதற்கு ஒரு பொய்யான காரணம் கற்பித்து மனம் சொல்வதை மழுங்க அடிக்கும். போகப் போக மனது மௌனம் சாதிக்க ஆரம்பித்து அகம்பாவ சுபாவம் மேலோங்கி மேலும் மேலும் அவரை பிறருக்கு தீங்கு செய்விக்க தூண்டும்.
ஆனாலும் வினை விதைத்தவன் வினை அறுத்துத் தான் ஆகவேண்டும். பிறருக்கு துன்பம் செய்யும் பொழுது அதனால் ஏற்படும் பாதிப்புகள்  பூமராங் போல செலுத்தியவரை தாக்கும் வல்லமை கொண்டது. பெற்றவர் செய்யும் பாவம் பிள்ளைகளை தாக்கும். பிறருக்கு நாம் ஒரு தீங்கு செய்ய முனையும் பொழுது கொஞ்சம் தனது பிள்ளைகளை நினைத்துக் கொள்வது நல்லது. ஒன்றுக்கு நூறு முறை யோசித்து செய்வது உத்தமம். கோபத்தில், ஆத்திரத்தில், அவசரத்தில் நாம் செய்யும் எந்த செயலும்  நமக்கு எதிராகவே திரும்பும். அப்போது அறிவு செயலிழந்து இருக்கும்.

கௌரவத்துக்காக ஒட்டுமொத்த குடும்பமும் கொலை!
நட்புக்கு துரோகம்
நம்பிக்கை துரோகம்